Wednesday, October 27, 2010

தொலைந்த வினாடிகள்

சிறு வயதில் தூர்தர்ஷன் பார்க்கும் போது இரண்டு, மூன்று வினாடி வினா நிகழ்ச்சிகள் இருந்ததாக நினைவு.  ஒரு கட்டத்தில் போர் அடித்தாலும், என் தந்தை என்னை அந்த நிகழ்ச்சிகளை கட்டாயபடுத்தி பார்க்க வைத்தார். அதன் விளைவு, ஆறாம் வகுப்பில் சாவகாசமாக கலந்து கொண்ட பள்ளி வினாடி, வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றில் நானும் என் நண்பனும் முதல் பரிசு வென்றோம். அதன் பின் ஆர்வத்துடன் ஒவ்வொரு வினாடி வினா  நிகழ்ச்சியையும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். அதில் மிக முக்கியமானது சித்தார்த்த பாசு பி.பி.சியில் நடத்திய 'மாஸ்டர்மைன்ட் இந்தியா'. 'ஹார்ட் டாக்', 'க்ளிக் ஆன்லைன் (எ) க்ளிக்', 'டாப் கியர்' போன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் பி.பி.சியில் வந்து கொண்டிருந்தன. இருப்பினும் 'மாஸ்டர்மைன்ட் இந்தியா' கொஞ்சம் ஸ்பெஷல். 

'மாஸ்டர்மைன்ட் இந்தியா'வில் இரண்டு சுற்றுகள். ஒன்று பங்கேற்பாளர்களின் விருப்ப பாடமாக கொண்டுள்ள பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது சுற்று பொது சுற்று - இதில் எந்த துறையிலும் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். விருப்ப பாடப் பிரிவில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, நடிகை கஸ்தூரி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் தேர்ந்தெடுத்தது - 'ஏ.ஆர்.ரஹ்மானின் இசை'. 1997இல் நடந்தது இது. ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தெரியாத பல தகவல்கள் கேள்விகளாக சித்தார்த்த பாசு கேட்க, எனக்கு ஆச்சர்யம். அந்த 'மாஸ்டர்மைன்ட் இந்தியா' சீஸனில் கஸ்தூரி அரைஇறுதி வரை வந்தார்.சன் டி.வியில் கூட ஜேம்ஸ் வசந்தன் ஒரு முறை பள்ளி மாணவர்களுக்கான வினாடி, வினா நிகழ்ச்சி நடத்தியதாக நினைவு. 

நிற்க. இன்று தொலைகாட்சிகளில் பார்த்தால் இது போன்ற வினாடி, வினா நிகழ்ச்சிகள் நடப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. மக்களின் பொது அறிவை 'தில்லாலங்கடியில் ஜெயம் ரவியின் ஜோடி யார்' என்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன தொலைக்காட்சிகள். 'தி ஹிந்து' நாளிதழ் 'யங் வேர்ல்ட்' வினாடி வினாவை பள்ளிகளுக்கு இடையில் நடத்தி வந்தாலும்,  அதில் பெரும்பாலும் மெட்ரிக் மற்றும் ஆங்கில பள்ளிகள் தான் கலந்து கொள்கின்றன. அப்படியானால் அரசு பள்ளிகள்?

என்னுடைய உறவினர் ஒருவர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்று தற்சமயம் ஐ.பி.எஸ் இறுதிக்கட்ட பயிற்சியில் உள்ளார். அவரிடம் பேசிய போது அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத இது போன்ற வினாடி வினா  நிகழ்ச்சிகள் தான் உந்துகோலாக இருந்ததாக தெரிவித்தார். சிறிது காலத்திற்கு முன் 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்த போது பொது அறிவு புத்தகங்களின் விற்பனை கொஞ்சம் அதிகரித்தது. அந்த நிகழ்ச்சி ஓய, மக்களின் பொது அறிவு பசியும் அடங்கி விட்டது.  

இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. இதற்கு மூல காரணம் மிகப் பெரும் மீடியா உந்துகோல்கள் இல்லாதது தான். இந்த வினாடி, வினா நிகழ்ச்சிகள் தான் மிகப்பெரும் உந்துகோலாக இருந்தன. இன்றைய நிலையில் நம் குழந்தைகள் 'டீலா, நோ டீலா' தான் விளையாடி கொண்டிருக்கின்றன. இதற்காக பொது அறிவு புத்தகங்கள் வாங்கி படிக்க கொடுத்து, ஓவர் நைட்டில் பள்ளி பாடங்களை போல் மனப்பாடம் செய்ய சொல்லக் கூடாது. அவ்வாறில்லாமல் ஆங்கில செய்தித்தாள்கள், கொஞ்சம் சிறுவர்  காமிக்குகள், ஆங்கில க்ளாசிக் புத்தகங்கள் போன்றவற்றை படிக்க கொடுக்கலாம். இதை படித்தால், உனக்கு இதை  வாங்கி தருகிறேன் என்று கொஞ்சம் லஞ்சம் கொடுத்து பாருங்களேன். இந்த விஷயத்தில் லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். 

1 comment:

Vetirmagal said...

Nostalgic. I read through so many blogs, yours is the first one I found about this nostalgic topic.I too used to enjoy them, and made my children appreciate is eventually. Those were conducted for the sake of encouraging knowledge, but the present day ones are conducted for money and glamour.

Sad indeed.

Share