Thursday, December 23, 2010

தி ஃபைட்டர் (2010)

Gladitorial Games எனப்படும் வீர விளையாட்டுகளுக்கு மவுசு, மனிதன் வேட்டையாடும் காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அந்த விளையாட்டுகளுக்கான மனிதனின் வேட்கை தான் ஜல்லிகட்டு தொடங்கி பாக்ஸிங் வரை பல விளையாட்டுகளாக பரிணமத்துள்ளது. பொதுவாக விளையாட்டுகள் தொடர்பான ட்ராமா வகை திரைப்படங்கள் அளவுக்கதிமாக ரொமான்டிஸைஸ் செய்யப்படும். மிகச் சிறந்த உதாரணம் ஸ்டலோனின் 'ராக்கி. முதல் பாகத்தில் உணர்வுகள் நிரம்பிய படைப்பாக இருந்து, அடுத்தடுத்த பாகங்களில் மொத்தமாக நீர்த்து போனது. இருப்பினும் இறுதி பாகமான 'ராக்கி பல்போவா' முதல் பாகத்திற்கு ஈடாக இருந்ததில் சந்தேகமில்லை. 'ரிமம்பர் தி டைட்டன்ஸ்', 'எனி கிவன் சண்டே', 'தி கராத்தே கிட்' (பழசு, புதுசு இரண்டும்), 'தி ப்ளைன்ட் ஸைட்', 'சின்ட்ரெல்லா மேன்' போன்ற படங்கள் சர்க்கரை தடவப்பட்ட ஃபீல் குட் வகை திரைப்படங்கள். அதே சமயம், 'தி ரேஜிங் புல்', 'மில்லியன் டாலர் பேபி', 'தி ரெஸ்ட்லர்' போன்ற படங்கள் அதே விளையாட்டுகளின் உண்மை நிலையை, சுத்திகரிக்காமல் அப்படியே கச்சாவாக காட்டின. இந்த இரண்டு வகை திரைப்படங்களையும் ஒன்று கலந்து பார்வையாளனுக்கு திகட்டாது வழங்கபட்ட படைப்பு தான் 'The Fighter'.

கிறிஸ்டியன் பேல், மார்க் வால்பெர்க் இரண்டு பேரும் பாக்ஸர் அண்ணன் தம்பிகளாக போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். மார்க் வால்பெர்க் நடித்திருக்கிறார் என்ற காரணத்திற்காக 'தி ஹாப்பனிங்', 'மேக்ஸ் பெய்ன்' போன்ற மேக்ஸிமம் பெய்ன் தந்த மொக்கை திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். காரணம் - வால்பெர்க்கின் அற்புதமான திரை ஆளுமை. ராப் பாடகராக இருந்து திரைப்பட நடிகர் ஆனவர் வால்பெர்க். கிறிஸ்டியன் பேல் - சொல்லவே வேண்டாம். 13 வயதில் ஸ்பீல்பெர்க்கின் 'தி எம்பயர்  ஆஃப் தி சன்' இல் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, 'அமெரிக்கன் சைக்கோ', 'தி மெசினிஸ்ட்', 'ரெஸ்க்யூ டான்', 'தி ப்ரஸ்டீஜ்' மற்றும் '3:10 டூ யூமா' வரை எனக்கு மிகவும் பிடித்த அத்தனை படங்களின் நாயகன். ஆஸ்கார் என்ற கனவு கிறிஸ்டியன் பேலுக்கு இந்த முறை கண்டிப்பாக நனவாகிப் போகும் போலிருக்கிறது. 

டிக்கி எக்லன்ட் (கிறிஸ்டியன் பேல்) தனது பாக்ஸிங் திறனால், மசாச்சூஸட் மாநிலத்தின் லோவல் நகரின் பெருமிதமாக திகழ்ந்து கொண்டிருந்தான். முக்கியமான ஆட்டம் ஒன்றில் டிக்கி தோற்க, அதன் பின் போதை மருந்துக்கு அடிமையாகிறான். டிக்கியின் தம்பியான மிக்கி வார்ட் (மார்க் வால்பெர்க்) தனது அண்ணனை போல் தானும் பாக்ஸர் ஆக வேண்டும் என நினைக்க, தன் அண்ணனையே ட்ரெய்னராக கொண்டு தனது பாக்ஸிங் கரியரை தொடங்க, டிக்கியோ அவனது போதை மருந்து பழக்கத்தால் மிக்கிக்கு வில்லனாகிறான். டிக்கி பயிற்சிக்கு நேரத்துக்கு வராததாலும், மானேஜரான அவர்களின் தாய் எடுக்கும் தவறான முடிவுகளாலும், மிக்கியின் பாக்ஸிங் வாழ்க்கையே சுக்குநூறாகிறது.  பார் ஒன்றில் வேலை பார்க்கும் சார்லீனை (ஏமி ஆடம்ஸ்) சந்திக்கும் மிக்கியின் வாழ்வு கொஞ்சம் பிரகாசம் அடைகிறது. அவளின் அறிவுரைப்படி டிக்கியிடமும், அவனது தாயிடம் இருந்தும் மிக்கி விலகி இருக்க அவனது பாக்ஸிங் வாழ்க்கை கொஞ்சம் புத்துணர்வு பெறுகிறது.

இதற்கிடையில் போலீஸ்காரர்களை அடித்ததால் சிறைக்கு சென்ற மிக்கி, வெளியாகி வர தனது தம்பிக்கு திரும்பவும் பயிற்சி கொடுக்க நினைக்கிறான். தோற்க இருந்த போட்டி ஒன்றில், டிக்கியின் டெக்னிக் ஒன்றை உபயோகித்ததால் மிக்கி ஜெயிக்கிறான். தனது குடும்பம், தனது காதலி இருவரும் தனது பாக்ஸிங் வாழ்க்கை சிறக்க தேவை என இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்கும் மிக்கி, இறுதியில் உலக பாக்ஸிங் டைட்டில் ஒன்றை வென்றானா என்பது தான் மீதிக் கதை. இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த போது 'இன்னொரு பாக்ஸிங் திரைப்படமா' என்று தான் தோன்றியது. இருப்பினும் திரைக்கதயிலும், பாத்திர படைப்பிலும் அசத்தி விட்டார்கள். மிக்கி, டிக்கி, அவர்களுடைய தாய், இரு தந்தைகள், எட்டு சகோதர சகோதரிகள், மிக்கியின் முன்னாள் மனைவி, மிக்கியின் மகள் என்று பல கதாப்பாத்திரங்களை ஸ்க்ரிப்டுக்குள் கொண்டு வந்ததற்காகவே திரைக்கதாசிரியரை பாராட்ட வேண்டும்.

திரைப்படத்தின் இறுதியில் நிஜ வாழ்க்கை டிக்கி எக்லன்டையும், மிக்கியையும் காட்டுவார்கள். நிஜ வாழ்வு டிக்கியின் உடல் மொழியை அப்படியே மாறாமல் கொண்டு வந்ததை பார்த்த போது ஆச்சர்யபட்டேன். மெத்தட் ஆக்டிங் என்ற முறையை எழுபதுகளில் உயிரூட்டிய பெருமை ராபர் டி நிரோ, அல் பேசினோ, டஸ்டின் ஹாஃப்மென்னை சாரும். பேசாமல் இவர்களின் வாரிசாக கிறிஸ்டின் பேலை அறிவித்து விடலாம். மார்க் வால்பெர்க்கை காட்டிலும் வயதில் இளையவர் கிறிஸ்டின் பேல். ஆனால்,  வால்பெர்க்கை  காட்டிலும் வயது கூடியவராக  காட்டியிருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்காக 20 கிலோ எடையை இழந்திருக்கிறார் கிறிஸ்டின் பேல். இனி பேட்மேன் வரிசையின் அடுத்த படமான, 'தி டார்க் நைட் ரிட்டன்ஸீ'க்கு திரும்ப எடை ஏற்ற வேண்டும். மனிதர் எப்படித் தான் சமாளிக்கிறாரோ.

இந்த முறை ஆஸ்காருக்கு கடுமையான போட்டி. பெரும்பாலும் கோல்டன் க்ளோப்பை முன் வைத்தே ஆஸ்கார் நாமினேஷன்கள் முடிவு செய்யப்படும். இந்த படம் 6 கோல்டன் க்ளோப் நாமினேஷன்களை பெற்றிருக்கிறது. எது எப்படியோ, கிறிஸ்டியன் பேலுக்கு சிறந்து துணை நடிகருக்கான ஆஸ்கார் உறுதி. பாக்ஸிங் அதிகமில்லாமல், எல்லோருக்கும் அறிந்த டெம்ப்ளேட்டில், ஒரு பாக்ஸிங் திரைப்படத்தை தந்த திரைக்கதாசிரியர்கள் Scott Silver, Paul Tamasy, Eric Johnsonக்கும், இயக்குநர்  David O' Russelக்கும் ஒரு சபாஷ்...

Tuesday, December 7, 2010

கார்பன் - சிறுகதை



         கூடுவாஞ்சேரி நிறைய மாறிப் போய் இருந்தது. நான் சிறு வயதாக இருக்கும் போது சென்னை வந்திருந்த சமயத்தில் ஒரு நெடுஞ்சாலையோர கிராமமாக இருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையின் எல்லையை விரிவுபடுத்தியதால், கூடுவாஞ்சேரியும் சென்னையின் ஒரு பகுதியாகி விட்டிருந்தது. பிரபல செல்ஃபோன் விற்கும் கடை ஒன்று புதிதாய் அங்கு கிளை திறந்து இருக்க, வாங்குகிறார்களோ இல்லையோ, பார்ப்பவர்களின் கூட்டம் அங்கு அலைமோதிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டு இருக்க, ஏதேனும் சாப்பிடு என்று என் வயிறு கத்திக் கொண்டு இருந்தது. மணி மதியம் 3:30 ஆகியிருந்தது. இரண்டும்கெட்டான் நேரம் என்று தெரிந்தும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். “சாப்பாடு இல்லை சார், தோசை தான் இருக்கு” என்று எதிர்பார்த்த பதில் வந்தது. 

         முகத்தை கழுவிய போது என் முகத்தை என்னாலே பார்க்க சகிக்கவில்லை. பயண களைப்பு என் முகத்தில் சுவடு விடாமல் அப்பி இருந்தது. இனிமேல் பேருந்து பயணம் கூடவே கூடாது என்று மனதிற்குள் ஒரு சபதம் எடுத்து கொண்டேன். ஓரத்தில் தீய்ந்து, எண்ணையில் மிதந்து கொண்டிருந்த தோசையை, தேங்காய் பிண்ணாக்கு சட்டினியுடன், கடலைமாவு சாம்பாருடன் தோய்த்து நாக்கில் படாமல் விழுங்கி கொண்டிருந்தேன். சென்னையில் யாரை பார்க்க செல்வது என்ற யோசனை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. குலோத்துங்கன் நினைவு வந்தது. சாப்பிட்டு விட்டு கே.கே நகர் பஸ் ஏறலாம் என்று முடிவெடுத்தேன்.

. கோயம்பேடு செல்லும் ஒரு வண்டி கூட பத்து நிமிடமாய் நிற்கவில்லை. கடைசியாக வடபழனி செல்லும் ஒரு டீலக்ஸ் பஸ்ஸில் ஏறினேன். முன்னால் இருந்த படிக்கட்டுக்கு நேராக, ஒரே ஒரு சீட் மட்டும் காலியாக இருந்தது. ஆனால் சீட்டுக்கடியில் மணல் கொட்டி இருந்தார்கள். யாரேனும் வாந்தியெடுத்திருக்க வேண்டும். நல்ல வேளை, வாடை எதும் அடிக்கவில்லை. அப்படியே அடித்திருந்தால் தான் என்ன, உட்கார்வது தானே முக்கியம்.

ஊரப்பாக்கம் வந்து விட்டிருந்தது. அங்கு ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர், என் பக்கத்தில் இருந்தவரிடம் “என்னப்பா கிடைச்சுதா?” என்றார். அப்போது தான் அருகில் அமர்ந்திருந்தவரை கவனித்தேன். ஓடிசலான தேகம், ஊதா நிற கட்டம் போட்ட சட்டை, ஒரு வித காக்கி கலர் கால்சராய் என்று என்னை போன்றதொரு பரிதாபகரமான தோற்றம். அதற்கு என் அருகில் இருந்தவர், “இல்லைண்ணே. கூடுவாஞ்சேரியில இருக்குன்ற நம்பிக்கையில வந்தேன். இங்கயும் இல்லன்னுட்டாங்க”. ஏறியவர் “மானேஜரான்ட கேட்டீயா” என்றார். அதற்கு என் அருகில் அமர்ந்து இருந்தவர், ”ஆப்பரேட்டர் இருக்குன்றார், ஆனா மானேஜர் உங்ககிட்ட எதுனாச்சும் இருந்தா கொடுங்கனு என்னான்டயே கேக்குறாரு” என்றார். ”பொட்டியோடயே, இராடும் வந்திருக்கனும். போயும் போயும் கார்பன் இராடு இல்லாம ஷோ நின்னுச்சுன்னா வெளிய சிரிப்பாங்க குமாரு. சரி, நான் தாம்பரத்துல கேக்குறேன்” என்று சொன்ன நின்று கொண்டிருந்தவர், எனக்குப் பின்னால் ஒரு இருக்கை காலியாகவும் அங்கு சென்று அமர்ந்தார்.

அவர்கள் எது பற்றி பேசுகிறார்கள் என்று ஓர் அளவுக்கு விளங்கியது. பிலிம் புரஜ்கடரில் வெளிச்சம் கார்பன் ஆர்கிலிருந்து வரும். அந்த வெளிச்சத்தில் தான் படம் ஓட்ட முடியும். அந்த ஆர்க்கிற்கு கார்பன் இராடு தேவை. பதினொன்னாவது படிக்கையில் இயற்பியல் வாத்தியார் இது பற்றி சொல்லி இருக்கிறார். ”த்யேட்டர்ல் எப்பனாச்சும் படம் மங்கி சவுண்ட் மட்டும் வரும். உடனே நீங்க ‘ஏய் படத்தப் போடு’னு விசலடிச்சி கத்துவீங்கள்ல. அப்ப இந்த கார்பன் இராடு ஒன்னு லூசாகி இருக்கனும், இல்லனா சூடான இராடை கழத்திட்டு வேற இராடு போடுவாங்க” என்றிருக்கிறார். அவர் அப்போது சொன்ன தொணியை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டேன்.

நான் மெதுவாக என் அருகில் அமர்ந்தவரிடம் கேட்டேன், “எந்த தியேட்டரு?” அதற்கு அவர், “இங்க பக்கத்துல தான், கண்டிகை” என்று சொன்னார். அப்போது பின்னால் அமர்ந்திருந்தவர் ஃபோனில், “இந்தா பக்கத்துல தான் ஆப்பரேட்டர் குமாரு இருக்கான் பேசுங்க” என்றபடியே என் அருகில் இருந்தவரிடம், “தாம்பரம் எம்.ஆர் தியேட்டர் ஆப்பரேட்டர் பேசுறாரு.” வாங்கிய குமார், “நான் குமாரு பேசுறேன் அண்ணே. உங்ககிட்ட ஒரு அம்பது கார்பன் இராடு கிடைக்குமாண்ணே? இல்லையா? கூடுவாஞ்சேரியில கேட்டேண்ணே. அந்த மானேஜர் என்னாண்டயே கேக்குறாரு. இங்க சுமாராப் போகுதுண்ணே. எவ்வளவு சம்பளமா? வார நாள்ல நூத்தி இருப்பதஞ்சு, சனி ஞாயிறு நூத்தம்பது. நீங்க இராடு மவுண்ட் ரோடுல தான வாங்குறீங்க? ஓ. சரிண்ணே. குரோம்பேட்டை வெற்றி, இராகேஷ் அங்க எதுனாச்சும் இருக்குமா? எங்க கேக்க? பல்லாவரம் லட்சுமியிலயா? கேக்குறண்ணே. கேட்டுட்டு உங்களுக்கு ஒரு கால் அடிக்கிறேன்” என்று கூறி ஃபோனை வைத்தார் என் அருகில் இருந்த குமார்.

நான் மெளனமாக கவனித்துக் கொண்டிருந்தேன். ஃபோனை வாங்கிய என் பின்னால் இருந்தவர், “இராடுக்கு பெரிய டிமாண்ட் ஆகிப் போச்சு குமாரு. மவுண்ட் ரோடுல இருக்குற த்யேட்டர், அப்புறம் பெரிய பெரிய த்யேட்டர் எல்லாம் டிஜிட்டல்ல படம் ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. இப்பல்லாம் சேட்டிலைட்ல, இந்த குட்டி டிஷ் வைச்சு படம் ஓட்டுறானுங்களாமே. இன்னா இன்னாமோ வந்துக்குது. இதனால பாரு, லோல் படறது என்னமோ நாம தான்” என்று சலித்துக் கொண்டார்.

தாம்பரம் வந்து விட்டிருந்தது. வண்டி பெருமளவில் காலியாகி விட்டிருந்தது. என்னருகில் அமர்ந்த குமார், இறங்கப் போனான். அதற்கு பின்னால் அமர்ந்தவர், “ஏய் என்னப்பா, பல்லாவரம் போகனும்ல. உக்காரு” என்றார். “ஆமாண்ணே. மறந்துட்டேன் ஏதோ நெனைப்புல” என்று பெண்கள் இருக்கையில் இடம் காலியாகவும் அங்கு ஜன்னலோரம் சென்று அமர்ந்தான். என் பின்னால் இருந்தவர் அவன் அருகில் சென்று அமர்ந்தார்.

தொடர்ந்து ஃபோன் பேசிக் கொண்டு இருந்தனர், “ஆமாண்ணே. நம்ம ஆப்பரேட்டர் குமாரு வருவான். அவன் கிட்ட பேசுறீங்களா? வேணாமா. என்னண்ணே, நீங்களே இப்டி சொன்னா நாங்க எங்க போவோம். சரிண்ணே. வரோம். பார்த்து செய்ங்க.” அவர்கள் கூறியது விட்டு விட்டு கேட்டது. கொஞ்சம் திரும்பி அவர்களை கவனித்தேன். இறுகிப் போய் தான் அமர்ந்து இருந்தார்கள். ஏதோதோ பேசிக் கொண்டு இருந்தனர். பேருந்து இரைச்சலில் ஒன்றும் கேட்கவில்லை.

அந்த இரைச்சலிலும் எனக்கு எப்படி தூக்கம் வந்தது என்று தெரியவில்லை. எழுந்த பார்த்த போது கட்டவுட்களால் மறைக்க பட்ட காசி த்யேட்டர் தான் கண்ணுக்கு பட்டது. அவர்கள் இருவரும் ஏதோவொரு நிறுத்தத்தில் இறங்கி விட்டிருந்தனர். உதயம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது 'டிஜிட்டலில் திரையிடப்படுகிறது' என்ற துண்டு சுவரொட்டி என்னை பார்த்து சிரித்தது. 

Share