Thursday, October 28, 2010

தி சோசியல் நெட்வொர்க்

ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது கொஞ்சம் சுலபமானது என்று தான் சொல்வேன். கட் செய்தால் ஆக்ஷன் ப்ளாக் என்ற வகையில் திரைக்கதையாளரின் பணி முடிந்துவிடும். அதற்கு பிறகு ஸ்டன்ட் இயக்குநர், இயக்குநர், ஓளிப்பதிவாளர் பாடு. அதே சமயம் ஒரு ட்ராமா வகை திரைக்கதை எழுதுவது கடினம். அதிலும் அதை சுவாரஸ்யமாக எழுதுவது அதனினும் கடினம். சோஷியல் நெட்வொர்க் திரைக்கதையாளர் Aaron Sarkin அதை திறம்பட செய்துள்ளார் என்று சொல்வது மிகச் சாதாரணமான புகழாரம். இந்த திரைக்கதைக்கு ஆஸ்கார் நாமினேஷன் கிடைக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யபடுவேன். இருப்பினும் கிட்டத்தட்ட 166 பக்க திரைக்கதையை இரண்டு மணி நேரத்தில் சொல்லிய திறமை இயக்குநர் David Fincher யே  சாரும். 166 பக்க திரைக்கதையை வேகமாக்க, கதாபாத்திரங்களை மிக வேகமாக டயலாக்குகளை பேச வைத்தாராம். அப்படி வேகமாக பேசினாலும் அத்தனை உறுத்தலில்லாமல் காட்சிகள் நகர்ந்தது தான் ஆச்சர்யம். உதாரணமாக  ஃபேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg ஆக நடத்திருக்கும் Jesse Aisenberg அந்த டயலாக்குகளை வேகமாக பேசுவது, அந்த கதாப்பாத்திரத்தின் தன்மையாக மாற்றி விட்டிருந்தார் Fincher.  


தினமும் ஐந்தாறு தடவையாவது ஃபேஸ்புக் என்னும் முகநூலை நோண்டி பார்க்கவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது. அந்த ஃபேஸ்புக் பிறந்த கதையை அறிந்து கொள்ள யாருக்கு தான் ஆர்வமிருக்காது. இத்தனைக்கும் இந்த படத்தின் திரைக்கதை 'The Accidental Billionaires' என்ற நான் ஃபிக்ஷ்ன் வகையறா புத்தகத்தின் அடிப்படையில் பின்னபட்டது. அது தான் ஆச்சர்யத்தின் உச்சகட்டம். முதலில் இந்த திரைப்படத்தின் திரைக்கதை மார்க்கெட்டில் உலாவிய போது தேறாத கேஸ் என்று சொல்லபட்டாலும், முதல் வாரத்திலேயே அமெரிக்க டொமஸ்டிக் மார்க்கெட்டில் போட்ட முதலான 50 மில்லியனை அள்ளி விட்டது இந்த படம். இன்னும் பெரும்பாலான நாடுகளில் வேறு ரிலீஸ் ஆகவில்லை. 


நிற்க. கதையை சொல்லி உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை. பொதுவாக ட்ராமா வகை திரைப்படங்களை டி.வி.டியில் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு தள்ளிவிடுவேன். ஆனால், இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த போது ஒரு வினாடி கூட சலிப்படையவில்லை. Adventureland, Zombieland, The Solitary Man ஆகிய திரைப்படங்களில் நடித்த Jesse Aisenberg இந்த திரைப்படத்தில் தனது வழக்கமான நடிப்பை வெளிபடுத்தினாலும், ஒரு கூச்ச சுபாவமுள்ள சராசரி அமெரிக்க கல்லூரி மாணவனை நம் கண் முன்னால் நிறுத்துகிறார்.  முதன் முதலில் MP3 பகிர்தலுக்கு உருவான Napster தளத்தை உருவாக்கிய Sean Parker ஆக பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக். திரைப்படத்தின்  பிற்பாதியில் வந்தாலும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். இதுவரை மொக்கை படங்களாக நடித்து கொண்டிருந்த டிம்பர்லேக்கிற்கு ஒரு இமேஜ் மேக் ஓவரை இந்த படம் கொடுக்கும் என நினைக்கிறேன். ஆனால் என்னமோ இந்த படத்தின் இறுதியில் 'Pirates of the Silicon Valley' படம் தான் நினைவுக்கு வந்தது. 


கொசுறு படம்: சென்ற வாரம் பார்த்த 'ரெட்'. ப்ரூஸ் வில்லிஸ், மார்கன் ஃப்ரீமேன், ஜான் மால்கோவிச், ஹெலன் மிர்ரம் நடித்த ஆக்ஷன் திரைப்படம்.  ரிடையர்ட் ஆகி வீட்டில் உட்கார்ந்து இருக்கும் எப்.பி.ஐ  ஏஜென்டுகளை தேடிபிடித்து கொலை  செய்கிறது ஒரு கும்பல். அதன் பிண்ணனியில் எப்.பி.ஐயே  இருப்பது திருப்பத்தில்ம் திருப்பம். அதே பேரில் வெளிவந்த ஒரு காமிக் வரிசையின் அடிப்படையில் உருவாகி இருந்தாலும், படம் ட்ராமா திரைப்படமா அல்லது ஆக்ஷன் படமா என்று நடுவில் கொஞ்சம் குழப்பம். இருந்தாலும் ஜான் மால்கோவிச்சிற்காகவும், ப்ரூஸ் வில்லிஸிற்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம். அதிலும் ஜான் மால்கோவிச் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு அமெரிக்க தியேட்டர்களில் விசில் பறந்தது தான் ஆச்சர்யம்.  கண்டிப்பாக ஒரு தடவை மட்டும் பார்க்கலாம். 


பி.கு: சத்தியமாக இந்த படத்திற்கும், தல அஜீத் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தல ரசிகர்கள் காப்பிரைட் சண்டைக்கு வராதீங்கப்பு...

Wednesday, October 27, 2010

தொலைந்த வினாடிகள்

சிறு வயதில் தூர்தர்ஷன் பார்க்கும் போது இரண்டு, மூன்று வினாடி வினா நிகழ்ச்சிகள் இருந்ததாக நினைவு.  ஒரு கட்டத்தில் போர் அடித்தாலும், என் தந்தை என்னை அந்த நிகழ்ச்சிகளை கட்டாயபடுத்தி பார்க்க வைத்தார். அதன் விளைவு, ஆறாம் வகுப்பில் சாவகாசமாக கலந்து கொண்ட பள்ளி வினாடி, வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றில் நானும் என் நண்பனும் முதல் பரிசு வென்றோம். அதன் பின் ஆர்வத்துடன் ஒவ்வொரு வினாடி வினா  நிகழ்ச்சியையும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். அதில் மிக முக்கியமானது சித்தார்த்த பாசு பி.பி.சியில் நடத்திய 'மாஸ்டர்மைன்ட் இந்தியா'. 'ஹார்ட் டாக்', 'க்ளிக் ஆன்லைன் (எ) க்ளிக்', 'டாப் கியர்' போன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் பி.பி.சியில் வந்து கொண்டிருந்தன. இருப்பினும் 'மாஸ்டர்மைன்ட் இந்தியா' கொஞ்சம் ஸ்பெஷல். 

'மாஸ்டர்மைன்ட் இந்தியா'வில் இரண்டு சுற்றுகள். ஒன்று பங்கேற்பாளர்களின் விருப்ப பாடமாக கொண்டுள்ள பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது சுற்று பொது சுற்று - இதில் எந்த துறையிலும் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். விருப்ப பாடப் பிரிவில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, நடிகை கஸ்தூரி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் தேர்ந்தெடுத்தது - 'ஏ.ஆர்.ரஹ்மானின் இசை'. 1997இல் நடந்தது இது. ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தெரியாத பல தகவல்கள் கேள்விகளாக சித்தார்த்த பாசு கேட்க, எனக்கு ஆச்சர்யம். அந்த 'மாஸ்டர்மைன்ட் இந்தியா' சீஸனில் கஸ்தூரி அரைஇறுதி வரை வந்தார்.சன் டி.வியில் கூட ஜேம்ஸ் வசந்தன் ஒரு முறை பள்ளி மாணவர்களுக்கான வினாடி, வினா நிகழ்ச்சி நடத்தியதாக நினைவு. 

நிற்க. இன்று தொலைகாட்சிகளில் பார்த்தால் இது போன்ற வினாடி, வினா நிகழ்ச்சிகள் நடப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. மக்களின் பொது அறிவை 'தில்லாலங்கடியில் ஜெயம் ரவியின் ஜோடி யார்' என்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன தொலைக்காட்சிகள். 'தி ஹிந்து' நாளிதழ் 'யங் வேர்ல்ட்' வினாடி வினாவை பள்ளிகளுக்கு இடையில் நடத்தி வந்தாலும்,  அதில் பெரும்பாலும் மெட்ரிக் மற்றும் ஆங்கில பள்ளிகள் தான் கலந்து கொள்கின்றன. அப்படியானால் அரசு பள்ளிகள்?

என்னுடைய உறவினர் ஒருவர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்று தற்சமயம் ஐ.பி.எஸ் இறுதிக்கட்ட பயிற்சியில் உள்ளார். அவரிடம் பேசிய போது அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத இது போன்ற வினாடி வினா  நிகழ்ச்சிகள் தான் உந்துகோலாக இருந்ததாக தெரிவித்தார். சிறிது காலத்திற்கு முன் 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்த போது பொது அறிவு புத்தகங்களின் விற்பனை கொஞ்சம் அதிகரித்தது. அந்த நிகழ்ச்சி ஓய, மக்களின் பொது அறிவு பசியும் அடங்கி விட்டது.  

இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. இதற்கு மூல காரணம் மிகப் பெரும் மீடியா உந்துகோல்கள் இல்லாதது தான். இந்த வினாடி, வினா நிகழ்ச்சிகள் தான் மிகப்பெரும் உந்துகோலாக இருந்தன. இன்றைய நிலையில் நம் குழந்தைகள் 'டீலா, நோ டீலா' தான் விளையாடி கொண்டிருக்கின்றன. இதற்காக பொது அறிவு புத்தகங்கள் வாங்கி படிக்க கொடுத்து, ஓவர் நைட்டில் பள்ளி பாடங்களை போல் மனப்பாடம் செய்ய சொல்லக் கூடாது. அவ்வாறில்லாமல் ஆங்கில செய்தித்தாள்கள், கொஞ்சம் சிறுவர்  காமிக்குகள், ஆங்கில க்ளாசிக் புத்தகங்கள் போன்றவற்றை படிக்க கொடுக்கலாம். இதை படித்தால், உனக்கு இதை  வாங்கி தருகிறேன் என்று கொஞ்சம் லஞ்சம் கொடுத்து பாருங்களேன். இந்த விஷயத்தில் லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். 

Thursday, October 14, 2010

சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்!!

என் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்தாலும் அவ்வப்போது எதாவது ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன். அப்பாவின் பழைய கணையாழி இதழ்களை தூசி தட்டி எடுத்து படித்து கொண்டிருந்த போது தான் கிடைத்தது 'ஜே.ஜே சில குறிப்புகள்'. ஆதிமூலம் அவர்களின் ஸ்ப்ரே பெயின்டிங் வகை ஓவிய அட்டை படத்துடன், க்ரியா வெளியீடாக வந்த முதல் பதிப்பு அது. இந்தியா டுடே இலக்கிய மலரை வருடம் தவறாது என் தந்தை வாங்கி கொண்டிருந்தார். அதில் வந்த ஒரு உரையாடல் ஒன்றில் தமிழில் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்று 'ஜே.ஜே சில குறிப்புகள்' என்று குறிப்பிடபட்டு இருந்தது, கொஞ்சம் ஆவலை கிளப்பி விட்டது.

ஒரு மாலை நேரத்தில் 'ஜே.ஜே'வை வாசிக்க ஆரம்பித்தேன். அது படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தான் என் தந்தையின் நான்கு வருட கல்லூரி டைரிகளை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். கட்டமைப்பு படி பார்த்தால் ஜே.ஜே சில குறிப்புகளும், என் தந்தையின் டைரி குறிப்புகளும் ஒன்றாக இருந்தது (என் தந்தையின் டைரி குறிப்புகள் மிக சுவாரசியமாக இருந்தது இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டது). எதையும் படித்து செரிக்கும் மனநிலையில் இருந்ததால் ஜே.ஜே சில குறிப்புகள் அத்தனை கடினமாயில்லை. கல்லூரி வந்த பின் சில இலக்கிய சிற்றிதழ்களில் ஜே.ஜே பற்றிய விவாதங்களை படிக்க நேர்ந்தது. அதிலும் முக்கியமாக 'வனம்' சிற்றிதழில் ஜீ.முருகனின் ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய கட்டுரை. முதல் பதிப்பு வெளியான போது அதை அவர் வாங்கி படித்ததையும், அந்த நாவல் தன் இலக்கிய வாசிப்பை எவ்வாறு மாற்றி அமைத்தது என்பதை குறிப்பிட்டு இருந்தார். அந்த கட்டுரை என்னை 'ஜே.ஜே'வின் மறு வாசிப்பிற்கு அழைத்து சென்றது. பல விடயங்கள் பிடிபட்டன. 

ஆர்வமாகி வாடகை புத்தக நிலையத்திலிருந்து 'ஒரு புளியமரத்தின் கதை'யை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். திருச்சியிலிருந்து, தேனிக்கு போகும் பேருந்து பயணத்தில் படித்து முடிக்கக் கூடிய எளிய நடையில் இருந்தது. ஜே.ஜே சில குறிப்புகளை காட்டிலும் மிக சுவாரசியமான நடையில் இருந்தாலும், பல கிசுகிசுக்களின் தொகுப்பாக இருந்ததைப் போன்ற ஒரு உணர்வு. அதை முடித்ததும் எங்கள் பல்கலையில் எம்.ஏ தமிழ் மாணவர்கள் கூட தீண்டாமல் புத்தம் பொலிவுடன் இருந்தது 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'. உண்மையிலேயே சிறந்த நாவல். என் பொறியியல் புத்தகங்கள் கூட கொடுக்காத ஒரு உன்னத தூக்கத்தை 'குழந்தைகள், பெண்கள், ஆண்களின்' இரு பக்கங்கள் தந்தன. (இன்னொரு ஸ்லீப்பிங் டோஸ்: விஷ்ணுபுரம் - அது பற்றி அப்புறம்)

இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்தவர் சு.ரா என்ற சிறுகதை எழுத்தாளர் தான். (சத்தியமாக பகடி இல்லை) 1997 தினமணி பொங்கல் மலரில் வந்த 'நாடார் சார்' கதை தான் எனக்கு மிகவும் பிடித்த அவரின் கதை. அப்போதைய எனது பள்ளி சூழலும், எங்கள் பள்ளியில் இருந்து விலகிச் சென்ற ஒரு பி.டி மாஸ்டரையும் அந்த கதை எனக்கு நினைவூட்டியது. இன்னொரு பிடித்த கதை 'மேல்பார்வை'. முன்ன கதை கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டதென்றால், பின்ன கதை பெண்கள் ஆடும் கூடைபந்தாட்டத்தை பற்றியது. தனி கதைகளாக வாசித்த பின் மொத்த தொகுப்பாக அவரின் கதைகளை வாசித்த போது ஒரே பேட்டர்னுக்குள் தன் கதைகளை அடைக்கிறாரோ என்று தோன்றியது.

அவரின் சிறந்த கதைகளாக கருதப்படும் 'ரத்னாபாயின் ஆங்கிலம்', 'பல்லக்கு தூக்கிகள்', 'ஆத்மராம், சோயித்ராம்' மற்றும் 'பள்ளம்' ஆகிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது பின்னமிரண்டு கதைகள். 'பல்லக்கு தூக்கிகள்' கதையின் கதைசொல்லி தான் இருக்கும் இடத்தை ஒரு அசூயையுடன் விவரிப்பதாக இருந்தது. அதே போல் எரிச்சலூட்டிய மற்றொரு கதை 'மீறல்'. பேருந்தில் அட்ஜஸ்ட் செய்ய தெரியாத ஒரு மேல்தட்டு பெரியவராகத் தான் கதைசொல்லியை உருவகப்படுத்த முடிந்தது. 'பிரசாதம்' கதையை படித்த போது ஏற்பட்ட ஒரு பரவசத்தை காட்டிலும், பாலு மகேந்திராவின் 'கதை நேரத்தில்' அது படமாக்க பட்ட போது அந்த கதைக்கு மேலும் மெருகூட்டியது போல இருந்தது.

பசவய்யா  என்ற அவர் கவிமுகத்தை நான் காணவில்லை. நண்பன் ஒருவன் படிக்கக் கொடுத்த அவரின் கவிதைகளை ஒரு வருடம் கழித்து அப்படியே பாதுகாப்பாக கொடுத்தேன். கவிதைகளின் மேல் ஆர்வமில்லாத காரணத்தை தான் சாட்சி கூண்டில் ஏற்ற வேண்டும். நான் அவரின் சிறுகதை தொகுப்பை வாசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் அவரின் 'பிள்ளை கெடுத்தான் விளை' கதை வெளியானது. அதன் விளைவாக எழுந்த விவாதங்கள் இன்றும் என் மண்டையை காய வைக்கும். அதிலும் சாரு 'தீராநதி'யில் அந்த கதையை அக்குவேர், ஆணிவேராக பிரித்து எழுதியதை படித்த போது இன்னும் அதிகமாக மண்டை காய்ந்தது. ஆனாலும், அந்த விவாதங்களை அப்படியே தொகுத்து புத்தகமாக வெளியிட்டது காலச்சுவடு. தமிழில் முதன் முதலாக ஒரு இலக்கிய சர்ச்சையையை புத்தகமாக வெளியிட்டு மார்க்கெட்டிங் செய்த பெருமை காலச்சுவட்டையே சாரும்.

சரியாக ஒரு வருடம் கழித்து சு.ரா பூவலகம் நீத்தார். என்ன தான் அவரை பற்றிய விவாதங்கள் எழுந்தாலும் தமிழ் இலக்கிய சூழலில் மறுக்க முடியாத ஆளுமை  சு.ரா. அவரின் மறைவுக்கு பின் ஜெ.மோ உயிர்மையில் எழுதிய 'சு.ரா' பற்றிய ஒரு நீண்ட குறுநாவலை  படிக்க நேர்ந்த போது தான், சு.ராவின் ஆளுமை புலப்பட்டது. இருப்பினும் அதில் உள்ள உண்மைகள் விவாதத்திற்கு உட்பட்டவை. காரணம் - ஜெ.மோ எழுதி இருந்த அந்த கட்டுரைஐஐஐ  சு.ராவிற்கு பின்னான அவரின் இலக்கிய இடத்தை ஸ்தாபிப்பதாகவே இருந்தது. வஞ்ச புகழ்ச்சி அணியை ஒரு கட்டுரை முழுவதும் உருவகப் படுத்திய பெருமை ஜெ.மோவையே சாரும்.

நிற்க. சு.ராவை பற்றிய பல அவதூறுகள் வந்தாலும், மனிதர் தன்னை ஒரு நிறுவனமாக ஸ்தாபித்து கொண்டதை போன்று தமிழில் வேறு எந்த எழுத்தாளரும் செய்ததாக தெரியவில்லை. அந்த வகையில் அவரை பாராட்டியே ஆகவேண்டும்.  அவரின் நினைவு நாளான இன்று, அவரை பற்றி ஒரு நேர்மையான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற நினைப்பில் தான் எழுந்தன மேலிருக்கும் என்னுடைய குறிப்புகள்...



















































Share