Sunday, May 23, 2010

ஏன் மணிரத்னம் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு மோசமான முன் உதாரணம்?

© மாமல்லன் கார்த்தி

உங்கள் கவனத்திற்கு (அ) எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பல முரண்கள் உங்களுக்குத் தோன்றலாம். 

பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது தான் ‘அலைபாயுதே’ வந்தது. எங்க ஊர்ல மணிரத்னம் படத்திற்கு அத்தனை பெரிய ஓபனிங் இல்லாததால ‘அப்பு’னு ஒரு மகா,மெகா காவியம் பொட்டிய கட்டுனதுக்கப்புறம் செகண்ட் ரீலிசா வந்தது. இதற்கு காரணம் இதற்கு முன் வெளியான ‘இருவர்’ மற்றும் ‘உயிரே’. எங்கள் ஊரில் முதல் நாள் முதல் ஷோவிற்கு மொத்தம் 10 பேர் தான் இருந்தார்களாம். அதனால ரிஸ்க் எடுக்க விரும்பாத தியேட்டர்காரர்கள் அதற்கப்புறம் மணிரத்னம் படம் என்றால் செகண்ட் ரிலீஸ் தான் செய்தார்கள். ‘ஆய்த எழுத்து’ வரை அது தொடர்ந்தது. ’குரு’ தப்பிதமாய் முதல் ரிலீஸ் செய்யபட்டு சுமாராக ஓடியது. உண்மையை சொல்லப் போனால் ’அலைபாயுதே’ அப்போது எனக்கு மிகவும் பிடித்த படமாகிப் போனது. படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து நண்பன் ஒருவன் ஒரிஜினல் வி.சி.டி கொடுக்க, அது தேயும் அளவு திரும்ப திரும்ப பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில்லை. 

இப்படி இருக்க மணிரத்னத்தின் அனைத்து படங்களையும் கல்லூரி வந்த பின் பார்க்க ஆரம்பித்தேன். அவருடைய படைப்புகளில் கூறப்படுவனவை உண்மையை போல் தோற்றம் அளித்தாலும், ஒரு வித குறுகிய மனப்போங்குடன் படைக்க பட்ட படைப்புகளாகவே தோன்றியது. முக்கியமாய் அவருடைய படங்கள் நெடுகிலும் ஒரு வெறுமை தோன்றியது. அந்த வெறுமை ஓட்டைகள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பிண்ணனி இசை ஆகியவற்றால் பூசி மொழுகப் படுவதும் தெளிவுறக் கண்டேன். இதனால் தான் மணிரத்னம் தன் படங்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்துகிறார் என்பதையும் புரிந்து கொண்டேன்.

இன்ஸ்பிரேஷன் - இந்த ஒரு வார்த்தையை வைத்து நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிதாமகர் மணிரத்னம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 1996 இந்தியா டுடே இலக்கிய மலரில், கமலிடம் ‘நாயகனில்’ உள்ள ‘பாதிப்புகள்’ பற்றி வாசந்தி அவர்கள் கேட்ட போது “அது Mario Puzo வை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சி” என்றார். பின்னர் ஏன் மார்லன் பிராண்டோவின் உடல்மொழி அப்படியே பயன்படுத்தபட்டது? 

இன்ஸ்பிரேஷனுக்கும், ப்ளேகரிசத்திற்கும் (Plagiarism - அப்பட்டமாய் காப்பி அடிப்பது) இடையே ஒரு சிறிய, மிகச் சிறிய இடைவெளி உள்ளது. மணிரத்னம் இன்ஸ்பிரேஷன் என்ற இடைவெளியை தாண்டி, ப்ளேகரிச வெளிக்குள் நுழைந்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. இதை நான் வெளிப்படையாக கூறினால் என்னை சுற்றும் விமர்சன கணைகள் கூராக பாய்கிறது. ‘நாயகன்’ காட்ஃபாதரின் வெளிப்படையான பாதிப்பு என்று சாதாரணமாக ஆங்கில படம் பார்ப்பவர் கூட சொல்லி விடுவர். அதில் இடம்பெறும் ‘Once upon a time in America' காட்சிகள் பட்டியலில் வராது. இருப்பினும், இந்த படம் ‘டைம்’ இதழின் சென்ற நூற்றாண்டின் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பிடித்ததால் விதிவிலக்கு. மேலும் ‘காட்ஃபாதரால்’ பாதிக்கபட்டு எடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் கணக்கில் அடங்கா. ஏன் ‘சர்க்கார்’ கூட காட்ஃபாதரின் தழுவல் தானே? ஆனால் அதை தழுவல் என்று வெளிப்படையாக டைட்டில் கார்டில் போடுமளவிற்கு ராம் கோபால் வர்மாவிற்கு தைரியம் இருந்தது. மணிரத்னத்திற்கு?? காட்ஃபாதர் ஹேங் ஓவர் ‘அக்னி நட்சத்திரத்திலும்’ தொடர்ந்தது.

’மெளன ராகமும்’ அதற்கு முந்தைய மணிரத்னம் திரைப்படங்களும் ஒரு வித அழகியல் தன்மையோடு தோன்றின. ஆனால் ‘இதயகோயில்’ எண்பதுகளின் மத்தியில் வந்த ட்ராஜெடி ‘காவியங்கள்’ வரிசையில் இருப்பதால் எனக்கு பிடிக்காமல் போனது. முக்கியமாய் அவரின் முதல் படமான ‘பல்லவி அனு பல்லவி’யை பார்த்த போது சற்று பிரமிப்பாகத் தான் இருந்தது. ஒரு வேளை அதற்கு காரணம் பாலுமகேந்திராவின் ஓளிப்பதிவா? பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் இது வரை தன்னை கதை சொல்லி அசத்தியவர்களில் ஒருவர் மணிரத்னம், மற்றொருவர் ‘கற்றது தமிழ்’ ராம் என்று தெரிவித்து உள்ளார். அத்தகையதொரு படைப்பாளி ‘தேசிய கவனம்’ பெறுவதற்காக சோடை போனாரோ என்றும் தோன்றுகிறது. 

மணிரத்னம் ’தளபதி’யில் புராண கதை ஃபார்முலா எடுபட்டவுடன், தேசிய அளவில் எடுத்துச் செல்ல சத்யவான், சாவித்ரி கதையை ‘ரோஜா’ என்று படைத்தார். இந்த படத்தின் அரசியலை, தமிழ் இலக்கிய விமர்சகர்கள் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டதால் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. 'பம்பாய்’ ஒரு வித மொன்னையான படைப்பு என்றே கூற வேண்டும். காரணம் அந்த படம் என்ன சொல்ல வந்ததோ அது மிக வெளிப்படையாக சொல்லப்படவில்லை. அன்றைய அரசியல் சுழலும் காரணமாக இருந்திருக்கலாம். அந்த மொன்னைத்தனம் ’இருவரி’லும் தொடர்ந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கும் இருவரை நேரடியாக திரைபாத்திரங்களாக படைத்தால் ட்ரவுசர் கிழிந்து விடுமே. அது தான் நடந்தது. பொதுவாக மணிரத்னம் திரைப்படங்கள் ‘ஏ’ செண்டர் ஆடியன்ஸ் எனும் பெருநகர மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று ஒரு வித மொக்கையான மேம்போக்கு நிலவி வருகிறது. அது ‘இருவரி’ல் பொய்த்தது என்றே கூற வேண்டும். என் சினீயர் ஒருவர் தெரிவித்த வரையில் இந்த படம் ஓடுவதற்கு ‘ஹிந்து’வில் மாய்ந்து, மாய்ந்து இந்த படத்தை பற்றி தலையங்கம் எழுதினார்களாம். அப்படியும் படம் சென்னையிலேயே, ஊஹீம்...

ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டிய சூழலில் வெளியான ’அலைபாயுதே’, ஆர்.செல்வராஜின் கதையிலும், சுஜாதாவின் வசனத்திலும் தப்பி பிழைத்தது என்றே சொல்ல வேண்டும். ‘மெளன ராகம்’ மணி திரும்பி விட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் ’அரசியல் சினிமா’ ஆசை  அவரை விடவில்லை போலும். ஈழப்பிரச்சனையை வைத்து ‘கன்னத்தில் முத்தமிட்டாலை’ எடுத்தார். நாடகத்தனமான ஈழத்தமிழில் பேசிய கதாபாத்திரங்கள் ஒன்று கூட ஈழத்து மனிதர்களாக தோன்றவில்லை. இதை பல ஈழ எழுத்தாளர்களும், நண்பர்களும் எழுதி தள்ளி விட்டனர்.

‘ஆய்த எழுத்து’ மணிரத்னத்தின் அரசியல் சினிமாக்களின் உச்சம் என்று கூறலாம். இந்த படம் திருச்சியில் போட்ட போது முதல் காட்சிக்கு  50  பேர் கூட தேறலை. (நானும் முதல் ஷோவிற்கு போயிருந்தேங்க... :D) உலகெங்கிலும் உள்ள திரைப்பட கல்லூரிகளில் ‘ரோஷாமான் ஸ்கிரீன்ப்ளே எஃபக்ட்’ என்று பாடமாகவே வைக்கபட்டுள்ளது. அந்த எஃபக்ட் மணிரத்னத்தை பாதித்தது. இருப்பினும் அது கூட ஏற்று கொள்ளக்கூடிய ஒன்று. அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘Amorres Perros' படத்தில் இடம்பெறும் காட்சிகள் அப்படியே காமிரா கோணம் மாறாது கையாளப் பட்டன. படத்தின் காட்சிகள் துண்டு, துண்டாக இருக்கும் போது ரசிக்கக் கூடியதாய் இருந்தாலும், மொத்தமாக காணும் போது பார்வையாளன் குழப்ப நிலைக்கு ஆளானது தான் படத்தின் தோல்விக்கு காரணம்.

‘குரு’ - ’ஏவியேட்டரின்’ சர்க்கரை தடவி எடுக்கப்பட்ட (அ) ‘ஏவியேட்டரின்’ ரீமேக் ரைட்ஸ் வாங்கப்படாத இந்திய படைப்பு. இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம். இப்புடியே இன்ஸ்பையர் ஆகிட்டே போனீங்கன்னா உங்களோட ஒரிஜினல் படைப்பு எப்ப வரும்ங்க. இன்னொரு கருத்தும் இருக்குது: இன்ஸ்பையர் ஆகுறது தப்பு இல்லை, அப்பிடி இன்ஸ்பையர் ஆனாலும் அந்த இறுதி படைப்பு படைப்பாளியோட பாணியில் இருந்தால் தப்பில்லையாம். நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதும் போது, அதன் மூலத்தை குறிப்பிடாமல் எழுதினால் என் மென்னியை திருகிவிடுவார்கள் அறிவியலாளர்கள். ‘பூ’ திரைப்பட டைட்டில் கார்டில் ‘நன்றி: ஷாங்க் ஈமு’ என்று வரும். காரணம்: ‘பூ’ படத்தின் பெரும்பாலான கூறுகள் ஷாங்க் ஈமுவின் ‘தி ரோட் ஹோம்’ கதையை தழுவியது. இது போன்ற குறைந்தபட்ச நேர்மையாவது மணிரத்னத்திடம் உள்ளதா?

இந்த இடத்தில் தான் மணிரத்னம் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு மோசமான முன் உதாரணமாகிறார். ஃபிலிம் இன்ஸ்டியூட்டிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் ஒரு ஒலகப்பட டி.வி.டியை சுட்டு ஒரு திரைக்கதை தயாரித்து ஒரு படமும் எடுத்து விடுவான். யாரேனும் ‘இது அந்த படத்தின் காப்பி தானே’ என்று கேட்டால் ‘மணிரத்னம் அடிக்கிறாரு, நான் அடிச்சா மட்டும் தப்பா’ என்று எதிர் கேள்வி தொடுப்பான். நம்முடைய பெரும்பாலான வெகுஜன அறிவுஜீவி விமர்சகர்கள், மணிரத்னத்தின் திரைப்படம் தழுவல் எனத் தெரிந்தாலும் ‘ஆஹா, ஒஹோவென’ புகழ்வார்கள். அதே வேறொருவர் காப்பி அடித்தால் போட்டு தாளித்தெடுப்பார்கள். 

நல்ல வேளை. மணிரத்ன தலைமுறை அவரோடு நின்றுவிட்டது. அவரின் மாணவர்கள் அழகம்பெருமாள், சுசி.கணேசன், ப்ரியா.வி ஏதோ ரெண்டு படங்கள் செய்து இருந்தாலும் ஒன்றும் பெரிசாக பெயர் சொல்லிக் கொள்ளும் படியாக சாதிக்கவில்லை. இருந்தாலும் இந்த கவுதம் மேனன், செல்வராகவன் வகையறாக்கள் மணிரத்ன வாரிசு என்ற பட்டத்திற்கு அடியை போடுவது தான் மேலும் கடுப்பேற்றுகிறது.

Sunday, May 16, 2010

Iron Man 2

படம் ஆரம்பிச்ச 10வது நிமஷத்தில வுட ஆரம்பிச்ச கொட்டாவி. கடைசி வரைக்கும் மூச்சு கூட விட வுடாம கொட்டாவி விட வைச்ச 'Iron Man 2' இயக்குநர் John Favreau’க்கு வாழ்த்துக்கள். (வக்காலி நீ மட்டும் கையில சிக்குன!!) எத்தனையோ பேரு சொல்லியும் கேக்காம போன என்னையும் ஜோட்டால அடிக்கனும். கதையெல்லாம் கேட்டீங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும். ‘சுறா’ படத்துக்கு கதை கேட்டீங்களா. அது மாதிரி தான் இதுவும். ஹாலிவுட்ல ஒரு ஃபிளாஸஃபி வைச்சுருக்காங்க, ஒரு படம் ஹிட்டாச்சுன்னா ‘இவன் எத்தனை பார்ட் எடுத்தாலும் பார்க்குறாண்டா.இவன் ரெம்ப நல்லவன்’னு தொடர்ந்து Sequel'ஆ எடுத்து தள்ள வேண்டியது.

டிபிக்கல் வில்லன் இண்ட்ரோ, ஹீரோ இண்ட்ரோ சாங்க், குட்டிங்க போடும் சக்கை ஆட்டம் போன்ற மசாலா படங்களுக்கு உரிய ஐட்டங்களோடு ஆரம்பிச்ச படம், அப்பால பப்படமா போச்சு. இதுக்கு மேல இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி நான் பட்ட வேதனையை உங்களுக்கு சொல்ல விரும்பலை. இருந்தாலும் ஒரே மன ஆறுதல் என்னன்னா, நல்ல வேளை  நான் ‘சுறா’ பார்க்கலை. இவண் - ‘சுறா பார்த்து நொந்தோர்க்கு ஆறுதல் சொல்வோர் சங்கம்’.

பி.கு: படத்துல ஒரே, ஒரே ஒரு ஆறுதல் - Scarlett Johansson


Sunday, May 9, 2010

இரா.முருகனின் ‘சேது’, என்.ஸ்ரீராமின் ‘முனி’

இளங்கலை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். புத்தகம் படிக்க பேய் போல் சுற்றி கொண்டிருந்தேன்.புத்தகம் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராது. எனக்கு சரியாக தீனி போட்டது என் பல்கலை நூலகம். முதுகலை தமிழ் மாணவர்களுக்கு என்று வாங்கபட்ட புத்தகங்கள் தூங்கி கொண்டிருக்கும் அங்கே.  ஜெயகாந்தன், கி.ரா, புதுமைபித்தன், தி,ஜா, கு.பா.ரா, லா.சா.ரா, மெளனி, ப்ரமிள், சு.ரா, எஸ்.ரா, சாரு, ஜெ.மோ உள்ளிட்ட அனைவரும் எனக்கு அங்கு தான் அறிமுகமானார்கள். அப்போது தான் இரா.முருகன் அவர்களின் “இரண்டாம் ஆட்டம்” சிறுகதை தொகுப்பை அங்கு கண்டேன். ஏற்கனவே ‘ராயர் காப்பி கிளப்’ யாஹீ குழுமம் மூலம் அவரை பற்றி தெரிந்தாலும், அவரின் படைப்புகள் ஒன்றை கூட படித்ததில்லை. அதில் இருந்த ‘பூச்சி’ கதையை ஏற்கனவே ’தினமணி’ 1997 பொங்கல் மலரில் படித்த நினைவு. 

அந்த தொகுப்பில் ‘சேது’ எத்தனையாவது கதை என்று தெரியவில்லை. அந்த கதையை படித்த பிற்பாடு, அதற்கு மேல் எனக்கு வேறு ஒன்றும் படிக்க தோன்றவில்லை. இரண்டு நாட்கள் வேறு எந்த புத்தகத்தையும் படிக்க தோன்றவேயில்லை. மந்திரித்து விட்ட கோழி போன்று சுற்றி கொண்டிருந்தேன். பலவற்றை மறுவாசிப்பு செய்யும் பழக்கம் இருந்தாலும், அந்த கதையை நான் அதற்கு பிறகு வாசிக்கவே இல்லை. ஒரு வேளை என்னுடைய வயது (அப்போது எனக்கு 19 வயது) அந்த சிறுகதை தந்த சிறு அதிர்ச்சியை, ஊதி பெரிதாக்கி விட்டதா என்று புரியவில்லை. சில விஷயங்கள் புரியாமல், அதனால் கிடைக்கும் இன்பம் அலாதியானது. 

கதை என்னவென்றே நான் சொல்லவில்லையே. ராமேஸ்வரத்தில் இருக்கும் நாழிக் கிணறுகளை வாளியோடு தீர்த்த யாத்திரை அழைத்து செல்லும் கைடு ஒருவனுடன், அங்கு தீர்த்த யாத்திரை வரும் பயணி ஒருவன் புலம்பும் புலம்பல் தான் கதை. கதையின் இறுதியில் ஒரு அதிர்ச்சிகரமான முடிவு. அது தான் என்னை மிகவும் பாதித்தது. 

ஹாஸ்டலில் கிடைக்கும் ஓ.சி ஆனந்த விகடனுக்கு நாயாய் அலைந்தது ஒரு காலம். எஸ்.ராவின் ‘துணையெழுத்து’ வேறு அப்போது அதில் வந்து கொண்டிருந்தது. ஆனந்த விகடனை காசு போட்டு வாங்க வக்கத்து திரிந்து கொண்டிருந்தேன். அப்போது நண்பன் தென்னரசு தான் பெரும்பாலும் ஆனந்த விகடன் வாங்குவான். சில முதுகலை மாணவர்களும் வாங்குவர். ஓ.சி வாங்கி படித்த ஒரு இதழில் அந்த கதை வந்து இருந்தது. அது என்.ஸ்ரீராமின் ‘முனி’. வெறும் வார்த்தைகள் மூலம் வாசிப்பவர்களின் மனத்தில் பெரும் ரசவாத மாற்றம் நிகழ்த்தலாம் என்பதை அந்த கதை மூலம் புரிந்து கொண்டேன். 

கதை: முனி கோயில் பூசாரி சாமியாடிய படி இரவில் நகர் முழுவதும் சுற்றி வருவார். முனி வேடம் கலைத்து காலையில் தன் மகனை கொஞ்ச வரும் பூசாரியை பார்த்து “யெம்மா முனி!!” என்று பயந்து அம்மாவின் பின்னால் ஒளிவான் மகன். அந்த சிறுவன் தன் தாயின் பின்னால் ஒளிந்து கொள்வதை ஒரு முறை காட்சி படுத்தி பார்த்த போது அதிர்ச்சியுற்றது என் மனம்.

இந்த கதையையும் அதற்கு பிற்பாடு நான் வாசிக்கவில்லை. என்,ஸ்ரீராமின் “வெளி வாங்கும் காலம்” சிறுகதை தொகுப்பை அதற்கு பிற்பாடு தான் வாசித்தேன். இருந்தும் இந்த கதையை திரும்ப வாசிக்க தோன்றவேயில்லை. முதல் வாசிப்பின் போது ஏற்பட்ட அந்த அதிர்வு அப்படியே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

இந்த இரு சிறுகதைகளும் ஒரே வகையான சட்டகத்தின் கீழ் வடிவமைக்கபட்டவை. அதாவது கதையின் இறுதியில் வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதே இந்த கதைகளின் ஆதாரம். அந்த முயற்சியில் இரு எழுத்தாளர்களும் வென்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பல சமயங்களில் இந்த இரு கதைகளும் எனக்கு ஒன்று போல் தோற்றமளித்தன. இந்த கதைகளை பற்றிய என்னுடைய பார்வையும், ஓப்பீடும் உங்களுக்கு மிகையாகத் தோன்றினாலும், இவற்றை வாசித்த போது நான் கண்டறிந்த உண்மைகள் தான் மேற் கூறியவை.

இந்த பதிவிற்கே சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி உங்களிடம்: நீங்கள் கடைசியாக எப்போது உங்கள் பெற்றோருக்கு, நண்பர்களுக்கு (அ) காதலி/காதலனுக்கு கடிதம் எழுதி அஞ்சல் (மின்னஞ்சல் அல்ல) செய்தீர்கள்?

Thursday, May 6, 2010

’அழியாத கோலங்களும்’, அழியாத நினைவுகளும்...

நானும் அப்பாவும் இணைந்து கழித்த பொழுதுகள் ஏராளம். அம்மாவிடம் சொல்லாமல் நானும், அப்பாவும் பைக்கில் ஒரு குட்டி பிக்னிக் போய் விட்டு, பின்னர் இருவரும் அம்மாவிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் அனுபவம் அலாதியானது. எனக்கு ஒன்பது வருடம் கழித்து பிறந்த என் தம்பி, கொஞ்ச காலம் என் இடத்தை பிடித்து கொண்டான். பெரும்பாலும் நானும், அப்பாவும் இணைந்து ஆங்கில படங்களுக்கு செல்வோம். ஆனால், என்னவோ அப்பாவுடன் பார்த்ததில் மிகவும் பிடித்த படம் “மகாநதி”. அப்பா எந்தளவிற்கு என்னை கட்டற்று வளர்க்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரு உதாரணம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை சென்னை வந்திருந்தோம். அப்போது கலைவாணர் அரங்கில் “மோக முள்” திரைப்படம் பகல் காட்சியாக ஓடியது. அந்த படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். பிற்காலத்தில் கொஞ்சம் விபரம் அறிந்து அந்த படத்தை பார்த்த போது, அப்பா எப்படி என்னை இத்தனை மெச்சூர் கண்டெண்ட் நிறைந்த படத்திற்கு என்னை அழைத்து சென்றார் என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது.

கேபிள் கனெக்‌ஷன் இல்லாத வீடு எங்களுடையது. யாராவது எங்கள் வீட்டை அடையாளம் காட்ட வேண்டுமெனில், “அதோ தெரியுது பாருங்க ஆண்டனா வைச்ச வீடு. அது தான்” என்பார்கள்.  அப்போதெல்லாம் ஞாயிறு மதிய பொழுதுகளில் தூர்தர்ஷனில் மாநில மொழி திரைப்படம் திரையிடுவார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் (1999) போது ஒரு முறை, பாலு மகேந்திராவின் “அழியாத கோலங்கள்” படத்தை திரையிட்டார்கள். நானும் ஆர்வத்துடன், அப்பா அருகில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். எங்கிருந்தோ வந்த அம்மா, “இந்த படத்தையெல்லாம் எதுக்கு சின்ன பையனை பார்க்க விடுறீங்க” என்று டி.வியை அணைத்தார். எனக்கோ செம கடுப்பு, “ஏம்மா பார்க்கக் கூடாது" என்று  சற்றே கோபமாக கத்தி விட்டேன். அதற்கு அப்பா,”ஏன் பாத்தா என்ன. எப்படினாலும் அவன்  அடலஸண்ட் ஸ்டேஜில் தானே இருக்கான். இதுவும் அந்த ஸ்டேஜில் இருக்கிற பசங்களை பத்தின படம் தானே. பார்த்தா என்ன” என்றார். ”அதெல்லாம் பார்க்க கூடாது” என்று அம்மா அவள்  வேலையை பார்க்க சென்றுவிட்டாள். இதுக்கு மேல டி.வி போட்டா ஒரு வேளை என் முதுகில் புகை வரலாம் என்பதால் நானும் அடக்கி வாசித்தேன்.

பின்னர் கல்லூரி வந்த பின் ஒரு முறை குமுதம் ‘தீராநதி’யில் பாலுமகேந்திராவின் பேட்டியை படித்தேன். அதில் ‘அழியாத கோலங்கள்’ தன்னுடைய பதின்ம பருவத்தின் பிரதபலிப்பு என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த படத்தை பற்றி அவர் கூறியது எனக்கு அந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தை கூட்டியது.  ஆனால், கடந்த மாதம் வரை இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த மாதம் யூடியுபில் மேய்ந்து, ஆய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த படம். “கண்டேன்  பொக்கிஷத்தை” (சேரன் படம் இல்லீங்கோ) என்று குதித்தது மனம்.  ஒரே சிட்டிங்கில் முழு படத்தை பார்த்த போது எனது பதின் பருவ நினைவுகளில் மூழ்கி போனேன்.

”அமெரிக்கன் பைய்” படத்தை தழுவி வெந்தும் வேகாமல், “பாய்ஸ்” என்றும், “துள்ளுவதோ இளமை” என்று ரெண்டு படம் எடுத்தார்கள். அந்த படங்களை எல்லாம் ஏன் பார்த்தேன் என்று நினைக்க வைத்து விட்டது இந்த படம். விடலை பருவத்தில் செய்யப்படும் சேட்டைகளும், அந்த பருவத்திற்கு உரிய ஆசைகளும் நாசூக்காக எடுத்து சொல்லப்பட்ட திரைப்படம் இதுவாகத் தான் இருக்கும். மூன்று விடலைப் பருவ நண்பர்கள், அவர்களின் ஆசிரியை, நடுத்தர வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் போஸ்ட் மாஸ்டர், ஊர் பொதுவில் நடனமாடும் கனிகை, போன்ற சுவாரசியமான பாத்திர படைப்புகள்.

ரயில்வே க்ராஸிங்க் கேட்டில் உட்கார்ந்து ரயிலுக்கு டாட்டா சொல்வது, அத்தை மகளிடம் தயங்கி தயங்கி ராத்திரி நேரத்தில் பேசுவது, நடன கனிகையிடம் உடலுறவு கொள்ள ஆணுறையை எடுத்து கொண்டு அவளிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் முழிப்பது, அவளிடம் தண்ணி வாங்கி குடித்து விட்டு ஆணுறையை பலூன் போல் ஊதி எதையோ சாதித்து விட்டது போல் ஆடி வருவது, போஸ்ட் மாஸ்டரும் நடன கனிகையும் உடலுறவு கொள்வதை மறைந்திருந்து பார்ப்பது, தனது வகுப்பாசிரியையை டாவடிப்பது, அவள் காலால் இட்ட பணியை தலையால் செய்வது போன்ற விடலை பருவத்திற்குரிய சேட்டைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகளை தமிழில் எந்தவொரு திரைப்படமும் ஆவணபடுத்தியதாக எனக்கு நினைவில்லை.

சலீல் செளத்ரி
இசை - சலீல் செளத்ரி. இந்தி திரைப்பட உலகின் இசை மேதையாக கருதப்படும் திரு.செளத்ரியை எப்படி இந்த படத்திற்கு இசையமைக்க பாலு மகேந்திரா சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அவர்களின் நண்பன் இருந்த பொழுதில் பிண்ணனி இசையற்ற அந்த நிசப்தம், சலீல் செளத்ரியின் இசை திறமையை தான் வெளிபடுத்துகிறது. இன்றைய இசையமைப்பாளர்கள் இதை பார்த்து தெரிந்து கொண்டால் பரவாயில்லை. தேவையற்ற நேரங்களில் எலக்ட்ரிக் கிடார் அலறுகிறது (”ஆயிரத்தில் ஒருவன்” - ஜி.வி.ப்ரகாஷ், தி கிங் அரைவ்ஸ், “விண்ணைத் தாண்டி வருவாயா” - ஏ.ஆர்.ரஹ்மான், அநேக தருணங்கள்)

அப்பாவிடம் இந்த படம் பார்த்ததை பற்றி தொலைபேசியில் பேச்சு வாக்கில் சொல்ல, மெதுவாக சிரித்தார். ஒரு அப்பாவின் ஆதங்கத்தோடு “படத்தை பாரு, அதே சமயம் படிச்சு வேலை வாங்குற வழியையும் பாரு” என்றார்.

Share