Saturday, November 28, 2009

பழசிராஜா


முதுகலை படிப்பு முடியும் வரை பதிவுலகம் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என்ற சங்கல்பத்துடன் தான் இருந்தேன். ஆனால், என்னை எழுதுமாறு தூண்டியது பழசிராஜா படத்திற்கு எழுதப்பட்ட பல நெகட்டிவான விமர்சனங்கள். என்னுடைய சொந்த ஊரான தேனியில் படம் வெளியான முதல் நாளில் திரையரங்களில் இருந்தது என்னவோ மொத்தம் 25 பேர் தான். நான் ’வெயில்’ படம் பார்த்த போது திரையரங்கில் மொத்தம் 5 பேர் தான் இருந்தனர். அதற்கு எவ்வளவோ இது பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன்.

கதை மிகச் சாதாரணமான கதை தான். பழசிராஜா தன் சமஸ்தானத்தை கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனியாருடன் போரிட்டு மடிகிறார். பொதுவாக குறுநில மன்னர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடத்திய போராட்டம், சுதந்திர போராட்டத்தில் சேர்க்க இயலாது. அவர்கள் தங்கள் சமஸ்தானத்தை அல்லது ராச்சியத்தை பாதுகாத்து கொள்ளவே அவர்கள் போரிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் என ஆரம்பித்து அத்தனை குறுநில மன்னர்களும் இந்த வகையறாக்களே. பிற்கால சாதி சார்ந்த அரசியலும், ஊடகங்களின் பூதக்கண்ணாடியும் தான் அவர்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக உருமாற்றின.

அந்த வகையில் பழசிராஜா ஒரு நேர்மையான படைப்பு என்றே கருதத் தோன்றுகிறது. காரணம், சந்தைப் படுத்தலுக்காக தேசிய அடையாளம் கொடுக்கப் படாமல் என்ன நடந்ததோ, அது அப்படியே கச்சாவாக கொடுக்கப் பட்டுள்ளது. படத்தில் நெருடலான விஷயங்கள் எடிட்டிங்கும், திரைக்கதையும் மட்டுமே. அதை தவிர்த்து டெக்னிக்கலாக, நிறைவான படம். யாரோ சொல்லி இருந்தார்கள், படத்தில் ஆர்ட் டைரக்‌ஷனுக்கு செலவே இல்லை என்று. ஏனென்று பார்த்தால் வெறும் வேட்டி, துண்டிற்கு எவ்வளவு செலவு ஆகி விடப் போகிறது என்று விளக்கம் வேறு.

படத்தில் மிகச் சாதாரணமாய் ஜெகதி வரும் பிரம்பு பல்லக்கை வடிவமைக்கவே கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆனதாம். பொத்தாம் பொதுவாக நாம் நோகாமல் குறை கூறுவதன் பின், பல பேரின் உழைப்பு உள்ளது. ஹாலிவுட் தரத்தில் படங்கள் எடுக்க வேண்டும் எனில் நிறைய நேரமும், காலமும் ஆகும். இதே படத்தை கமல்ஹாசன் எடுத்திருந்தால் ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். முத்துராஜிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்.

சூரியன், நாட்டாமை போன்ற திரைப்படங்களுக்கு பின் சரத்குமாரை எனக்கு மிகவும் பிடித்தது இந்த படத்தில் தான். அவரின் திரைப்பட வாழ்க்கையிலேயே மிகச் சிறப்பான கதாப்பாத்திரம்.

படத்திற்கு சுத்தமாக விளம்பரமே இல்லை. ஒரு வேளை மலையாளத்திலே போட்ட காசை எடுத்து விட்டதால் இங்கே மெனக்கெட் தேவையில்லை என நினைத்திருப்பார்களே என்னவோ??!!

Share