Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் - 'எ வெட்நஸ்டே' ஒரு ஒப்பீட்டுப் பார்வை -


’எ வெட்னஸ்டே’ திரைப்படத்தைப் பார்த்த போது, இந்திய சினிமாவில் இப்படியும் ஒரு படம் வருகிறதே என்று மிகப் பெருமை அடைந்தேன். அதே திரைப்படத்தை கமலஹாசன் ரீமேக் செய்கிறார் என்ற போது மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், என்னவோ படத்தைப் பார்த்த போது சிறிது ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு வேளை நான் நிறைய எதிர்பார்த்து விட்டேனோ என்று எனக்கு தோன்றியது. ஆனால், இதன் மூலப் படத்தைப் பார்த்த நண்பர்களும் அதேயேத் தான் சொன்னார்கள்.

இந்த திரைப்படத்தின் கதையை சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. வலையுலகம் முழுவதும், இந்த திரைப்படத்தின் கதை நிரம்பியுள்ளது. ஒரு படைப்பை குறை செல்வது எளிது. அந்த படைப்பை உருவாக்குபவனுக்கு தான் தெரியும் அதன் வலி. ஆனால் என்ன செய்வது, குறை சொல்லியே பழக்கப் பட்டு விட்டோம். சரி, மேட்டருக்கு வர்றேன்.

கமல் C4 ப்ளாஸ்டிக் வெடிகுண்டுகள் பற்றி சொல்வார். C4 குண்டுகளின் தொழில்நுட்பம், அமெரிக்க இராணுவத்திற்கு மட்டுமே காப்புரிமை செய்யப்பட்ட ஒன்று. அது எக்காலத்திற்கும், அவர்கள் வெளியில் விடக் கூடிய வாய்ப்புகள் குறைவு. அது இந்நேரம் வெளியில் வந்திருந்தால், தினமும் ஒரு மிகப் பெரும் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும். மேலும், அது செக்காஸ்லோவேக்கியாவில் செய்யப் பட்டது அல்ல. மாறாக செக் குடியரசுவின் வெடிகுண்டு தொழில்நுட்பத்தின் பெயர் செம்டெக்ஸ். மிகத் திறமையாக அறிவியல் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதும் இரா.முருகன், இதில் எவ்வாறு கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. பேசாமல் ஆர்.டி.எக்ஸோடு நின்றிருக்கலாம்.

படம் முழுவதும் ஒரு வித எமோஷனலான நிகழ்வுகள் சொல்லப் பட்டிருக்கிறது. முக்கியமாக, கமல் தான் எதற்காக குண்டு வைத்தேன், என மோகன்லாலிடம் விவரிக்கும் காட்சி. ‘எ வெட்நஸ்டேவில்’ அது மிக இயல்பாக மும்பை சூழலிற்கு அந்த காட்சியை விவரித்து இருப்பார்கள். ஆனால், என்னவோ தமிழில் கமல் விவரிக்கும் காட்சி சோபையாகத் தான் இருந்தது. தேச பக்தி வாடை தெரியாமல் ஹிந்தியில் தேச பக்தியை சொல்லி இருப்பார்கள். இங்கு சிறிது வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.படத்தின் நீளத்தைக் கூட்டுவதற்காகவே, ஒரு சில காட்சிகளின் நீளத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.

தமிழக அரசியல் சூழல், ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் கமிஷனர் மாறுவது போன்ற விஷயங்கள் மிக அழகாக சொல்லப் பட்டு இருக்கின்றன. ’மும்பையில் குண்டு வெடிச்சா நமக்கு என்ன? நாம தான் இங்க கன்யாகுமரியில காலை ஊண்டி நிக்கிறோமே. அங்க குண்டு வெடிச்சா நமக்கு அது வெறும் செய்தி. ஏன்னா அவன் வேற நாட்டுக்காரன். வேற மொழி பேசுறான்’ போன்ற நச்சென்று மனதில் பதியும் வசனங்கள்.

இரசிக்கக் கூடிய பாத்திரத் தேர்வுகள். கணேஷ் வெங்கட்ராம், தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார். அதே போல் அவருடன் வரும் மற்றொரு அதிகாரியாக Dr. பரத் ரெட்டி. ஐ.ஐ.டி ட்ராபவுட்டாக வரும் குட்டி ஆனந்த் (சதிலீலாவதி படத்தில் கமலின் மகனாக வருவாரே). கமல் படம் என்றால் கண்டிப்பாக சந்தானபாரதி இருக்க வேண்டுமா? அதே போல் விருமாண்டி, கில்லி திரைப்படங்களில் வரும் நடிகர் (பேர் தெரியலை மாமே. தெரிஞ்சா சொல்லுங்க), அவர் தீவிரவாதி என்று காட்டியதும், தியேட்டரில் சிரிக்காதவர்கள் யாருமே இல்லை.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், நல்ல பொழுதுப்போக்கு திரைப்படம். திரையுலகில் பொன் விழா கொண்டாடும் உலக நாயகன், இனியும் இதே போன்ற திரைக்கதைகளை தெரிவு செய்து நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

Share