Tuesday, December 7, 2010

கார்பன் - சிறுகதை



         கூடுவாஞ்சேரி நிறைய மாறிப் போய் இருந்தது. நான் சிறு வயதாக இருக்கும் போது சென்னை வந்திருந்த சமயத்தில் ஒரு நெடுஞ்சாலையோர கிராமமாக இருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையின் எல்லையை விரிவுபடுத்தியதால், கூடுவாஞ்சேரியும் சென்னையின் ஒரு பகுதியாகி விட்டிருந்தது. பிரபல செல்ஃபோன் விற்கும் கடை ஒன்று புதிதாய் அங்கு கிளை திறந்து இருக்க, வாங்குகிறார்களோ இல்லையோ, பார்ப்பவர்களின் கூட்டம் அங்கு அலைமோதிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டு இருக்க, ஏதேனும் சாப்பிடு என்று என் வயிறு கத்திக் கொண்டு இருந்தது. மணி மதியம் 3:30 ஆகியிருந்தது. இரண்டும்கெட்டான் நேரம் என்று தெரிந்தும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். “சாப்பாடு இல்லை சார், தோசை தான் இருக்கு” என்று எதிர்பார்த்த பதில் வந்தது. 

         முகத்தை கழுவிய போது என் முகத்தை என்னாலே பார்க்க சகிக்கவில்லை. பயண களைப்பு என் முகத்தில் சுவடு விடாமல் அப்பி இருந்தது. இனிமேல் பேருந்து பயணம் கூடவே கூடாது என்று மனதிற்குள் ஒரு சபதம் எடுத்து கொண்டேன். ஓரத்தில் தீய்ந்து, எண்ணையில் மிதந்து கொண்டிருந்த தோசையை, தேங்காய் பிண்ணாக்கு சட்டினியுடன், கடலைமாவு சாம்பாருடன் தோய்த்து நாக்கில் படாமல் விழுங்கி கொண்டிருந்தேன். சென்னையில் யாரை பார்க்க செல்வது என்ற யோசனை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. குலோத்துங்கன் நினைவு வந்தது. சாப்பிட்டு விட்டு கே.கே நகர் பஸ் ஏறலாம் என்று முடிவெடுத்தேன்.

. கோயம்பேடு செல்லும் ஒரு வண்டி கூட பத்து நிமிடமாய் நிற்கவில்லை. கடைசியாக வடபழனி செல்லும் ஒரு டீலக்ஸ் பஸ்ஸில் ஏறினேன். முன்னால் இருந்த படிக்கட்டுக்கு நேராக, ஒரே ஒரு சீட் மட்டும் காலியாக இருந்தது. ஆனால் சீட்டுக்கடியில் மணல் கொட்டி இருந்தார்கள். யாரேனும் வாந்தியெடுத்திருக்க வேண்டும். நல்ல வேளை, வாடை எதும் அடிக்கவில்லை. அப்படியே அடித்திருந்தால் தான் என்ன, உட்கார்வது தானே முக்கியம்.

ஊரப்பாக்கம் வந்து விட்டிருந்தது. அங்கு ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர், என் பக்கத்தில் இருந்தவரிடம் “என்னப்பா கிடைச்சுதா?” என்றார். அப்போது தான் அருகில் அமர்ந்திருந்தவரை கவனித்தேன். ஓடிசலான தேகம், ஊதா நிற கட்டம் போட்ட சட்டை, ஒரு வித காக்கி கலர் கால்சராய் என்று என்னை போன்றதொரு பரிதாபகரமான தோற்றம். அதற்கு என் அருகில் இருந்தவர், “இல்லைண்ணே. கூடுவாஞ்சேரியில இருக்குன்ற நம்பிக்கையில வந்தேன். இங்கயும் இல்லன்னுட்டாங்க”. ஏறியவர் “மானேஜரான்ட கேட்டீயா” என்றார். அதற்கு என் அருகில் அமர்ந்து இருந்தவர், ”ஆப்பரேட்டர் இருக்குன்றார், ஆனா மானேஜர் உங்ககிட்ட எதுனாச்சும் இருந்தா கொடுங்கனு என்னான்டயே கேக்குறாரு” என்றார். ”பொட்டியோடயே, இராடும் வந்திருக்கனும். போயும் போயும் கார்பன் இராடு இல்லாம ஷோ நின்னுச்சுன்னா வெளிய சிரிப்பாங்க குமாரு. சரி, நான் தாம்பரத்துல கேக்குறேன்” என்று சொன்ன நின்று கொண்டிருந்தவர், எனக்குப் பின்னால் ஒரு இருக்கை காலியாகவும் அங்கு சென்று அமர்ந்தார்.

அவர்கள் எது பற்றி பேசுகிறார்கள் என்று ஓர் அளவுக்கு விளங்கியது. பிலிம் புரஜ்கடரில் வெளிச்சம் கார்பன் ஆர்கிலிருந்து வரும். அந்த வெளிச்சத்தில் தான் படம் ஓட்ட முடியும். அந்த ஆர்க்கிற்கு கார்பன் இராடு தேவை. பதினொன்னாவது படிக்கையில் இயற்பியல் வாத்தியார் இது பற்றி சொல்லி இருக்கிறார். ”த்யேட்டர்ல் எப்பனாச்சும் படம் மங்கி சவுண்ட் மட்டும் வரும். உடனே நீங்க ‘ஏய் படத்தப் போடு’னு விசலடிச்சி கத்துவீங்கள்ல. அப்ப இந்த கார்பன் இராடு ஒன்னு லூசாகி இருக்கனும், இல்லனா சூடான இராடை கழத்திட்டு வேற இராடு போடுவாங்க” என்றிருக்கிறார். அவர் அப்போது சொன்ன தொணியை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டேன்.

நான் மெதுவாக என் அருகில் அமர்ந்தவரிடம் கேட்டேன், “எந்த தியேட்டரு?” அதற்கு அவர், “இங்க பக்கத்துல தான், கண்டிகை” என்று சொன்னார். அப்போது பின்னால் அமர்ந்திருந்தவர் ஃபோனில், “இந்தா பக்கத்துல தான் ஆப்பரேட்டர் குமாரு இருக்கான் பேசுங்க” என்றபடியே என் அருகில் இருந்தவரிடம், “தாம்பரம் எம்.ஆர் தியேட்டர் ஆப்பரேட்டர் பேசுறாரு.” வாங்கிய குமார், “நான் குமாரு பேசுறேன் அண்ணே. உங்ககிட்ட ஒரு அம்பது கார்பன் இராடு கிடைக்குமாண்ணே? இல்லையா? கூடுவாஞ்சேரியில கேட்டேண்ணே. அந்த மானேஜர் என்னாண்டயே கேக்குறாரு. இங்க சுமாராப் போகுதுண்ணே. எவ்வளவு சம்பளமா? வார நாள்ல நூத்தி இருப்பதஞ்சு, சனி ஞாயிறு நூத்தம்பது. நீங்க இராடு மவுண்ட் ரோடுல தான வாங்குறீங்க? ஓ. சரிண்ணே. குரோம்பேட்டை வெற்றி, இராகேஷ் அங்க எதுனாச்சும் இருக்குமா? எங்க கேக்க? பல்லாவரம் லட்சுமியிலயா? கேக்குறண்ணே. கேட்டுட்டு உங்களுக்கு ஒரு கால் அடிக்கிறேன்” என்று கூறி ஃபோனை வைத்தார் என் அருகில் இருந்த குமார்.

நான் மெளனமாக கவனித்துக் கொண்டிருந்தேன். ஃபோனை வாங்கிய என் பின்னால் இருந்தவர், “இராடுக்கு பெரிய டிமாண்ட் ஆகிப் போச்சு குமாரு. மவுண்ட் ரோடுல இருக்குற த்யேட்டர், அப்புறம் பெரிய பெரிய த்யேட்டர் எல்லாம் டிஜிட்டல்ல படம் ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. இப்பல்லாம் சேட்டிலைட்ல, இந்த குட்டி டிஷ் வைச்சு படம் ஓட்டுறானுங்களாமே. இன்னா இன்னாமோ வந்துக்குது. இதனால பாரு, லோல் படறது என்னமோ நாம தான்” என்று சலித்துக் கொண்டார்.

தாம்பரம் வந்து விட்டிருந்தது. வண்டி பெருமளவில் காலியாகி விட்டிருந்தது. என்னருகில் அமர்ந்த குமார், இறங்கப் போனான். அதற்கு பின்னால் அமர்ந்தவர், “ஏய் என்னப்பா, பல்லாவரம் போகனும்ல. உக்காரு” என்றார். “ஆமாண்ணே. மறந்துட்டேன் ஏதோ நெனைப்புல” என்று பெண்கள் இருக்கையில் இடம் காலியாகவும் அங்கு ஜன்னலோரம் சென்று அமர்ந்தான். என் பின்னால் இருந்தவர் அவன் அருகில் சென்று அமர்ந்தார்.

தொடர்ந்து ஃபோன் பேசிக் கொண்டு இருந்தனர், “ஆமாண்ணே. நம்ம ஆப்பரேட்டர் குமாரு வருவான். அவன் கிட்ட பேசுறீங்களா? வேணாமா. என்னண்ணே, நீங்களே இப்டி சொன்னா நாங்க எங்க போவோம். சரிண்ணே. வரோம். பார்த்து செய்ங்க.” அவர்கள் கூறியது விட்டு விட்டு கேட்டது. கொஞ்சம் திரும்பி அவர்களை கவனித்தேன். இறுகிப் போய் தான் அமர்ந்து இருந்தார்கள். ஏதோதோ பேசிக் கொண்டு இருந்தனர். பேருந்து இரைச்சலில் ஒன்றும் கேட்கவில்லை.

அந்த இரைச்சலிலும் எனக்கு எப்படி தூக்கம் வந்தது என்று தெரியவில்லை. எழுந்த பார்த்த போது கட்டவுட்களால் மறைக்க பட்ட காசி த்யேட்டர் தான் கண்ணுக்கு பட்டது. அவர்கள் இருவரும் ஏதோவொரு நிறுத்தத்தில் இறங்கி விட்டிருந்தனர். உதயம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது 'டிஜிட்டலில் திரையிடப்படுகிறது' என்ற துண்டு சுவரொட்டி என்னை பார்த்து சிரித்தது. 

6 comments:

Unknown said...

Story is good.. Nicely written

Unknown said...

கதை, அமைப்பு, கேரக்டர்கள் எல்லாம் நல்லா இருக்குங்க. வோட்டுப் போடப் பொதுவா சோம்பல் படற நான் உங்களுக்கு தமிழ்மணம் வோட்டு போட்டேன். இன்னும் எழுதுங்க. வாழ்த்துகள்!

Unknown said...

Follow-upக்கு

Prasanna Rajan said...

@ பாபு

நன்றி

@ கெக்கே பிக்குணி

ஓட்டுக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...

geethappriyan said...

நல்ல வித்தியாசமான இண்ட்ரெஸ்டிங்கான் கதை நண்பா,நம்ம ஏரியா களம் என்பதால் இன்னும் கவனித்து படித்தேன்.

Prasanna Rajan said...

மிக்க நன்றி கார்த்திகேயன். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி...

Share